Skip to main content

மூன்று கவிதைகள்




றுமணம் கொண்ட விசாலமான படுக்கை


நட்சத்திர விடுதியின்

விசாலமான அறையைத்

திறந்து காட்டிய  பணியாள் 

"நன்றி!"  என்று

சொல்லிவிட்டு நகர்கிறான்.


நான்

உடைந்து அழுகிறேன்


*


சப்பின் குஷன்


நான் மீண்டும்

கசப்பிற்குத் திரும்பினேன்.


மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல

அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது


கசப்பு 

ஒரு செளகர்யம்

ஆதுரம்


மேலும் அது எனக்கு
நன்கு பரிச்சயமானது

அதில்
பரபரப்பில்லை.
பதற்றமில்லை

சாகசங்களில் வெறி மூண்ட 
வேட்டையாள் ஒருவன்
துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு
இப்போது
புளியமரத்தடியொன்றில்
தலை சாய்த்துக் கிடக்கிறான்

கசப்பில்
கசப்பைத் தவிர 
வேறு ஒன்றுமேயில்லை

முக்கியமாக
இனிப்பில் இருக்கிற
"உள்ளே என்ன இருக்கிறதோ?" 
என்கிற
வெடிகுண்டில்லை

*

ல்லாவற்றிற்கும் நன்றி!

காதலர்
வெடித்துச் சினக்கின்றனர்.

கண்ணீர் வடிக்கின்றனர்.

பிரிவே உத்தமம்  என்று 
உறுதி பூண்கின்றனர்

"எல்லாவற்றிற்கும் நன்றி!" 
என்றவர்கள்
பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில்
"எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று
எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்...

அது யாருடைய குரல்

Comments

Popular posts from this blog

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?