நறுமணம் கொண்ட விசாலமான படுக்கை நட்சத்திர விடுதியின் விசாலமான அறையைத் திறந்து காட்டிய பணியாள் "நன்றி!" என்று சொல்லிவிட்டு நகர்கிறான். நான் உடைந்து அழுகிறேன் * கசப்பின் குஷன் நான் மீண்டும் கசப்பிற்குத் திரும்பினேன். மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது கசப்பு ஒரு செளகர்யம் ஆதுரம் மேலும் அது எனக்கு நன்கு பரிச்சயமானது அதில் பரபரப்பில்லை. பதற்றமில்லை சாகசங்களில் வெறி மூண்ட வேட்டையாள் ஒருவன் துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு இப்போது புளியமரத்தடியொன்றில் தலை சாய்த்துக் கிடக்கிறான் கசப்பில் கசப்பைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை முக்கியமாக இனிப்பில் இருக்கிற "உள்ளே என்ன இருக்கிறதோ?" என்கிற வெடிகுண்டில்லை * எல்லாவற்றிற்கும் நன்றி! காதலர் வெடித்துச் சினக்கின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர். பிரிவே உத்தமம் என்று உறுதி பூண்கின்றனர் "எல்லாவற்றிற்கும் நன்றி!" என்றவர்கள் பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில் "எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்... அது யாருடைய குரல் |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments