அலுவலகத்தில் ஒரு சிறு பதவி உயர்வு. சால்வை அணிவிக்கிறார்கள் கொஞ்சம் பணமுடை கோல்டு லோன் கடையில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது ஆம்புலன்ஸைப் பிடிக்க ஓடுகிறேன் அடுத்த மாதம் ஒரு கருத்தரங்கம் பழைய நூல்களைப் புரட்ட அடிக்கடி நூலகம் செல்ல வேண்டியுள்ளது. ஊரில் ஒரு பொதுப் பிரச்சனை முன்னணியில் நிற்பதால் கொலை மிரட்டல்கள் வருகின்றன அக்பர் யாரென்றே அறியாத ஒரு இளைஞன் என் போனை அக்பர் காலத்தது என்று அறிவித்து விட்டான் நேற்று புதுச்செடியில் முதல் பூ வீட்டுப் பூனை ஈன்றிருக்கிறது ஒரே மியாவ்…மியாவ்… மியாவ்.. இவை எல்லாமே உன் 'ஹேண்ட் பேக்'குள் நடக்கின்றன. |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments