Skip to main content

Posts

இதை நான் நம்புகிறேன்

  அ ம்மா.... அம்மா... அம்மா... என்று  ஒரு உயிர்  உள்ளுக்குள் அழுதபடி அமர்ந்திருக்கையில் அகத்திக்கீரை இலை ஒன்று முகம் திருப்பிப் பார்க்கும் இதை நான் நம்புகிறேன் அதனால் ஒன்றுமே செய்ய முடியாத போதும்

இசை கவிதைகள்

  1 மே லோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு ஒரு உடையிலிருந்து இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல ட்ரவுசருக்கு மாறுவது ட்ரவுசருக்கு மாறுகையில் நான் தயாராகிறேன் எதற்கென்றால் எல்லாவற்றிற்கும் உறக்கத்திற்கு போர்க்களத்திற்கு எல்லாவற்றிற்கும் ட்ரவுசர் அணிந்தவுடன் சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள் மேலோட்டமான நம்பிக்கைகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை சுற்றுலா செல்கையில் ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு ட்ரவுசர் ஒரு சுற்றுலா என்பாரும் உண்டு ட்ரவுசரில் இருக்கையில் நான் என் காதலி அதை அளக்க முடியாது என்பது போலவே சுருக்கவும் முடியாது ட்ரவுசரை காற்றோட்டம் என்பது மூடர் தம் சுருக்கம் 2 அங்கு கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்த இசை சட்டென நின்று விட்டது நிசப்தமும்  முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும் ஒன்றல்ல வாத்தியக்காரன் வாத்தியத்திலிருந்து கையைத் தூக்கிவிட்ட பிறகு உருவாகும் தாளமே! நீ அங்கென்னைக் கூட்டிச் செல்! 3 த மிழ் மலர்கள் அது ஒரு சின்னத் தோட்டம் அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள். இன்று புதிதாக அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள் “அருமலர் எழிலகம்...

முத்தம் என்பது வளர்ந்து கொண்டிருப்பது

ஒ ரு முத்தம்  பிறக்கிறது வளர்கிறது வளர்ந்து கொண்டே இருப்பது எதுவோ அதுவே முத்தம் ஒரு முத்தம்  நினைத்துக் கொள்ளும் போது இரட்டிப்பாகிறது முத்தமிட்டுக் கொண்டவர்கள் துடைத்தெறியப் படுகிறார்கள் முத்தம் இன்னும் அங்கேயே அப்படியே மின்னிக் கொண்டிருக்கிறது. பிறந்ததனைத்தும் அழிகின்றன முத்தங்களைத் தவிர தித்திக்காத ஒன்று  முத்தமாவதில்லை ஒரு போதும்  நாம் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம் ஊழி  தூங்கிக் கொண்டிருக்கிறது ஆணைப்  பெண்ணும் பெண்ணை ஆணும் மாறி மாறி கடித்துக் கொள்ளும் சம்பவத்திற்கு வேறு பெயர் சூட்டலாமே?

ஒளி மாதிரி ஒன்று

  பு லராத  அதிகாலையிலேயே மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் கூடி விட்டது. முதலில் அவர்கள் டோக்கன் வாங்க வேண்டும் அந்த டோக்கனைக் காட்டி  சீட்டு வாங்க வேண்டும் அந்த சீட்டைக் காட்டி மருத்துவரை வாங்க வேண்டும். மருந்துச் சீட்டைக் காட்டி  மருந்துகள் வாங்க வேண்டும் டோக்கன் கொடுக்கும்  அந்த ஒல்லிப்பெண் மருத்துவமனைக்கு வெளியே  எவ்வளவு பாவம் தெரியுமா? “ எங்கயோ அந்த மகராசிய இன்னுங் காணல…” என்று முனகுகிறார் ஒரு முதியவர். பிணி நீங்கும் முன்பே மருத்துவமனையை விட்டு   ஓடி விடுகிறவர்கள் எதிலிருந்து தப்பிக்கிறார்கள்? எல்லா முகங்களிலும்  அப்பிக் கிடக்கிறது கும்மிருட்டு கல்லிடுக்கில் எழுந்து கொண்டிருக்கும் கதிரவன்   மெல்ல வரட்டும் இப்போதைக்கு  நான் டியூப் லைட்களை போட்டு விடுகிறேன்.

மூன்று கவிதைகள்

ஓடுகிற பையன் எமோஜி நா ன் ஒரு இக்கட்டான தருணத்தில் அவனை வாட்ஸ் அப்பில் சந்தித்தேன் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு ஓடும் பையனாக சொல்லி ஆக வேண்டியதை சொல்லிவிட்டு ஓடும் பையனாக அவன் ஒரு பொடியன் என்பதால் “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது அவனுக்கு எளிது ஆகவே சொல்லியும் சொல்லாமல் இருப்பதில் அவன் சமத்தன் அவன் வெறுமனே ஒரு கேள்வி அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை ஆகவே எதையும் அவன் நின்று கேட்பதில்லை “இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..” என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த அப்பாவிச் சிறுவனவன், “சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு ஓடி விடுவான். நாசகாரக் கும்பல் எ னக்குத் தெரியும் இங்கு காணும் எல்லாத் துன்பங்களுக்கும் இந்தக் கவிஞர்கள்தான் காரணம் மண் மண்ணென்றிருந்தது இவர்கள் அதில் சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள் சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால் அதிலிருந்து நரகம் என்று ஒன்று தானே எழுந்து கொண்டது கண்ணெறிருந்த கண்ணில் இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள் இடையென்றிருந்த இடையில் வேலியில் படரும் கொடியைக் கொண்டு வந்து சுற்றி விட்டார்கள் பேசின...

செழு செழிப்பு

உ ச்சிப் புதர் மறைப்பில் ஒரு பூ குலுக்கம்  பார்த்தேன். அது அணிலோ புள்ளோ வானோ வளியோ அல்ல, நானே தானோ  

பார்த்தாயா?

கு லாவியபடியே  என்னைக் கடந்து செல்கிறார்கள் இரு தோழியர். தோள்களை உரசிக் கொண்டு க்ளூக், க்ளூக் என்று சிரித்துக் கொண்டு மெல்ல மெல்ல  நடந்து செல்கிறார்கள். பார்க்காமல் இருக்க இயலாத காட்சி அது எழ  வேண்டிய தருணத்தில்  சரியாக எழுந்த  வயலின் கீற்று போல் அவர் ஆட்காட்டி விரலிரண்டும் ஒரு சேர எழுந்து  தொட்டுக் கோர்க்கின்றன. " பார்த்தாயா"  என்பது போல் எழுந்து கொண்டிருக்கிறது உதயத்தின் புத்தொளி அவர்கள்  அப்படியே நடந்து நடந்து தூரத்தில் மறைகிறார்கள். நெருங்கி வருகிறது ஒரு இனிய துயர்