நெடுஞ்சாலை ஓரத்தில் இன்னும் வெட்டப்படாதிருக்கும் ஒரு புளியமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன இரு காதல் உள்ளங்கள் இருசக்கர வாகனத்து இருக்கையின் மீது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது ஒரு எளிய உணவு. அவள் அதை ஸ்பூனால் எடுத்து அவனுக்கு ஊட்டுகிறாள். அவன் மென்று மென்று விழுங்குகிறான் அவள் நாணத்துச் சிவப்பை. சிலர் அதைக் கண்டும் காணாதது போல் முகம் திருப்பிச் செல்கிறார்கள் சிலர் உற்றுக் கவனித்து ஏசிப் போகிறார்கள். அந்த விருந்தைக் கடக்கையில் அவளும் அறியாது அவனும் அறியாது நானும் உண்டேன் ஒரு வாய். . |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments