ஒருவன் வழக்கமான தன்னை உடைத்து குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு பேரணியில் கலக்கிறான். இவன் இன்னொருவன் மகத்தானவன். தனி ஆட்கள் சேர்ந்து சேர்ந்து உருவாகிறது ஓர் அணி. அணிகள் கூடிக்கூடி அலையடிக்கிறது பேரணி. நெருப்பினால் இழுத்துக்கட்டப்பட்ட பேரணிகள் பிரம்மாண்ட பேரணிகளாகி சடசடக்கின்றன. தொண்டையிலிருந்து எழும் முழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி இதயத்தை அடைகின்றன. நெஞ்சமே குரலாகி கூவி இடிக்கையில் ஒவ்வொருவரும் தனித்தனி பிரம்மாண்டம். (தோழர் சுகுமாரனுக்கு) |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments