அந்தியில் மிதக்கும் வெண் கொக்கு மங்கலாகி விடுகிறது. அந்தி எல்லாவற்றையும் மங்கலாக்க விரும்புகிறது. நமது மூர்க்கத்திற்கெதிராய் ஒவ்வொரு நாளும் தெய்வீகத்தை ஏந்தி வந்து போராடுகிறது அது. மங்கும் வேளையில் வானில் விசாலத்தில் கடலின் ஆழத்தில் வேறொன்று உதிக்கிறது நிலவுக்கு முன். மங்க மாட்டாது எரிந்து கொண்டிருக்கும் ஒருவன் மோட்டார் சைக்கிளை மேலும் முடுக்குகிறான். அந்தியின் வசமிருப்பது ஒரே ஒரு சொல்தான். ஒன்றே ஒன்று என்பதால் அது ஒரு மந்திரம். நாள் முழுக்க ஒன்றுமே செய்யாத ஒருவனிடமும் அது அவ்வளவு பரிவுடன் சொல்கிறது... "போதும்...! " |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments