Skip to main content

Posts

Showing posts from 2023

பேப்பர்காரராக வந்தவர்

  உ லகத்தை உருட்டி உனக்குத்தான் என்பதாக அந்தரத்தில் எறிந்தார் எனக்கேதான் என்பது போல் நானதை எட்டிப் பிடித்தேன். அப்போது உறுதியாக ஒரு அவுட்.

பிறர் என்றொருவரில்லை (தோழர் தியாகுவின் “சுவருக்குள் சித்திரங்கள்”)

பிறர் என்றொருவரில்லை (தோழர் தியாகுவின் “சுவருக்குள் சித்திரங்கள்”) https://akazhonline.com/?p=4299 நன்றி : அகழ்

அந்த வானம்

ந டுச்சாமத்தில் கொஞ்சம் துணிகளோடு வீட்டை விட்டு வெளியேறிய அன்று மேலே வானம் இருந்தது ஊசிக் கப்பலும் புறாக்களின் குட்டிகரணமும் பார்த்த அந்த வானம் அன்று அது வேறு வேடிக்கைகள் விடைபெற்ற பிறகு முதன் முதலாக எப்போது அண்ணாந்து பார்த்தேன் என்பது நினைவில்லை ஆனால் அப்போது அழுது கொண்டிருந்தேன் அது நினைவில் இருக்கிறது. சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த  ஒரு உயிரை சட்டெனச் சரித்து விட்டு எழுந்து போகிறது இன்னொரு உயிர் கீழே விழுவது வானத்தில் விழுகிறது 'புற்று ' உறுதியாகிவிட்ட நாளில் மருத்துவமனையிலிருந்து ஏன் வானிற்கு நடந்து போகிறாள் ஒருத்தி? அந்தி என்பது வண்ணக் கலவைகளின் கும்மாளம் என்று நம்பும் ஒருவன் தன்னை  ஓவியன் என்றும் நம்பிக் கொள்கிறான் அம்மாவை எரித்துவிட்டு வந்த நாளில் தெரிந்ததொரு வானம் வானம் என்றால் என்னவென்று சொல்லும்  ஒரு வானம்

ஒத்தையடிப் பாதை

  நா ன் போகட்டுமென்று அவர் நின்று கொண்டிருக்கிறார் அவர் போகட்டுமென்று நான் நின்று கொண்டிருக்கிறேன் நான்தான் போக வேண்டுமென்று அவர் சிரித்துக் கொண்டு நிற்கிறார். அவரே போகட்டுமென்று நான் அடம்பிடிக்கிறேன் இந்தப் பத்து நொடித் தாமதத்தை பையில் போட்டு அலுவலகத்திற்கு எடுத்துப் போனேன். அம்மா கொடுத்தனுப்பிய குளோப் ஜாமூன் மறைந்து போய்விட்டதோவென டிபன் பாக்ஸை திறந்து திறந்து மூடுகிறான் ஒரு சிறுவன்.

பஸ் டிரைவரின் " play list"

இ தோ இந்த டிரைவர் ஒலிக்கவிடும் பாடல்கள் ஏற்கனவே எண்ணிறந்த முறைகள் கேட்டவை. ஆயினும் அவை திடீரென வருகின்றன திடீரென வருதலின் ஆனந்தத்தோடு என்னிடம் மேம்படுத்தப்பட்ட  ஒலிநுட்பக் கருவிகள் உண்டு 'அன் லிமிடெட் டேட்டா' வுள்  உலகம் கொட்டிக் கிடக்கிறது. தவிர என்னிடம் ஒரு சிறிய கார் உண்டு என்னால் காற்றைப் பறிக்க இயலும் குளுமையைக் கூட்ட இயலும் இன்னும் என் கைவசம் நிறையவே உண்டு கைவசம் உள்ள எல்லாவற்றின் மீதும் தொற்றிப் படர்ந்துவிடும் ஒன்றை ஊதி ஊதி துடைத்துக் கொண்டிருக்கிறேன். காகங்கள் மகிழ்ந்து கரையும் விருந்தோ இந்த ஓட்டுநன்! கை நிறையப் பலகாரங்களோடு முகம் முழுக்க ஜொலிப்போடு பள்ளத்துள் கிடக்கும் என் பெயரை  பறக்க விட்டபடி என் வீட்டிற்குள் நுழைய தெரியவில்லை எனக்கு.

கண் - கடைக்கண்

க டவுள் மனிதனுக்கு  முதலில் கண்களைப் படைத்தான்  பிறக்கப் பிறக்கவே அகலத் திறந்து கொண்டன கண்கள். மனிதன் மகிழ்ச்சியில் கூவினான். நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான். "கடவுளே! நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியே எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!" கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டு பிறகு படைத்தான் கடைக்கண்ணை. * விஷயம்  மிக மிக எளிது ஒரு மனிதன்  இன்னொரு மனிதனை ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்து விட்டால் போதும்.     * தம்பி! இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்! மேலும் இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு! பார்த்துப் பார்த்து பழசாக்கு! பார்த்துப் பார்த்துப் பாழாக்கு! * காதலுக்குக் கண் இல்லை.  ஆனால் கடைக்கண் உண்டு. காதலர் கடைக்கண்ணிலிருந்து கண்களுக்குத் திரும்புவதுதான் "காதலின் ஆவியாதல்"  என்றழைக்கப்படுகிறது * கனக சுப்பு ரத்தினா! காணாமல் கண்டு கண்டு கடுகை மலையாக்குவதில் சமர்த்தன் உன் குமரன். அவனை நம்பி நீ "மாமலையைக்  கடுகாக்குவேன்" என்று சைக்கிள்  செயினைச் சுற்றாதே!  * கூற்றம்  !  கூற்றம் !  கூற்றம்...

காதல் போயின்...

வீ ணாகி வழியும் தெருக்குழாய் நீரை பொறுப்பேற்று அடைப்பதற்காக... பள்ளி வாகனத்திலிருந்து கையசைக்கும் சின்னஞ் சிறு கரங்கள்  ஏமாந்து போகாதிருப்பதற்காக... மலர்கள் சொல்லும் காலை வணக்கத்தை செவி மடுத்துப் புன்னகைப்பதற்காக... நீண்ட க்யூவில்  கட்டக் கடைசி ஆளாய்  சாந்தமாக  நிற்பதற்காக... துப்புரவு வண்டியின் மணியோசையிலிருந்து ஒரு புதிய பாடலைத் துவக்குவதற்காக... ஒவ்வொரு மகளையும் என் மகள் பெயர் சொல்லி அழைப்பதற்காக... நறுமணத் தைலத்தால் என்னை அலங்கரிக்கும் பகட்டிலிருந்து விடுபட்டு நானே ஒரு நறுமணப் புட்டியாகி  மணமூட்டுவதற்காகத்தான் அன்பே! நான் உன்னை என் காதலி   என்று கற்பனை செய்து கொள்கிறேன். நான் உன்னை என் காதலி என்று கற்பனை செய்து கொள்ளும் காலங்களில் அன்பே! இந்த பூமியின் இதயத்துள் கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்கும் திட்டத்திற்கு சற்றே ஓய்வளிக்கிறேன்.

சத்தியமூர்த்தி

வா யில் தேன் ரப்பரோடு கிலு கிலுப்பைக்குச் சிரித்தபடி  மல்லாந்திருந்த பருவத்தில் எனக்குப் பெயர் சூட்டினார்கள். அதை  மூன்று முறை என் காதிலும் சொன்னார்கள் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. தமிழும் தெரியாது. தெரிந்திருந்தால் அந்தப் பெயரின் மீது அப்போதே  மூத்திரம் பெய்திருப்பேன். அவ்வளவு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி தலைமீது வைத்து விட்டு அந்தக் கழுத முண்டை பாடினாள்... பாடினாள்... பாடிக் கொண்டே இருக்கிறாள்... "கண் மூடு இரத்தினமே!" "கண் மூடு இரத்தினமே!" "கண் மூடு இரத்தினமே!" .

அமர காதல் கவிதை

இ ந்தச் சொற்கள் யார் மீது பாடப்பட்டதோ அவள் அதற்குத் துளியும் அருகதையற்றவள் இந்தச் சொற்களை எவன் பாடினானோ அவன் இதற்குமுன் இப்படி பலபேரைப் பாடியவன் ஆயினும் இரு ஈனர்களுக்கிடையே வந்து அமர்கிறது ஒரு அமர காதல் கவிதை அதைக்  காதலின் தெய்வீகம் எழுதுகிறது அதுவேதான் வாசித்தும் கொள்கிறது.

எளிய சேவை

நா ன் அவளைக் கண்ட பொழுது அவள் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள். புதிதாக  ஒன்றை அறிந்து கொள்வதன் மூலம் புதிதாக வந்து சேர்வதற்கென்று அவள் அழகில் துளி இடம் கூட இல்லை. ஆனால் போனால் போகிறதென்று  அவள் வாசித்துக் கொண்டிருந்தாள். என் சட்டைக்காலரைப் பிடித்து இழுத்தது அவள் தாழ்குழல். பின்னங்கழுத்தின் பிசிறுகளை சீராக்கி அதை ஒருமுறை வாரிச்சுருட்டி அவள் தோளில் இட வேண்டும் என்றொரு ஆசை பூத்தது. இந்த எளிய சேவைக்கும் இன்னொருவன் குதிரை மீதேறி வர வேண்டும் என்கிற உண்மை என்னை துக்கத்துள் தள்ளுகிறது.

ஸ்தலம்

ம ண்ணில் இருந்த கையை எடுத்து மடியில் ஏந்திப் பற்றிக் கொண்ட பின் ஆழ்ந்த குரலில் மெல்லக் கேட்கிறாய்... "இப்போது சொல்... எங்கு செல்லலாம்?" இல்லை... இல்லவே இல்லை... உன் கைகளைப் பற்றிக் கொண்ட பின் இனி போவதற்கென்று  இந்த உலகில் இன்னொரு இடம் இல்லை.

நன்றி!

  இ ந்த நாளிற்காகத்தான் பூமிக்கே வந்தது போல  எவ்வளவு நன்றிகள் இன்று! ஏழு வருடங்களாக பால் ஊற்றிவிட்டு வெறுங்கையோடு திரும்பும் பாட்டிக்கு  இன்று  முதன்முதலாக நன்றி சொன்னேன் உணவு விடுதியின் பரிசாரகருக்கு பில் தொகையில் பாதியை அன்பளிப்பாக அளித்தேன். கூடவே  ஒரு நன்றியையும்.  பொய்யான காரணத்தோடு விடுப்பிற்கு விண்ணப்பித்த எனது பணியாளிற்கு விடுப்பையும் நன்றியையும் சேர்த்து வழங்கினேன். தென்னங்கீற்றுள் ஒளிந்துள்ள குயிலே! தென்னங்கீற்றே!   உங்களுக்கு என் நன்றி!  இவருக்கும் அவருக்கும் எவரென்றே தெரியாத எல்லோர்க்கும்  நன்றி! நன்றி!! உயிருள்ளவை, உயிரற்றவை என்று சொல்லப்படுவனவற்றுள் காணக்கிடைக்கும் உயிர்த்தன்மை ஒவ்வொன்றுக்கும்  நன்றி! இந்தப் பாழும்  உடலில் இவ்வளவு நன்றிகள் இத்தனை காலமும் எங்குதான் இருந்தன! அய்யோ..! என் கும்மிருட்டின் பயங்கரத்துள் அவை எப்படி எப்படித்தான் அழுகித் தவித்தன! நன்றி! நன்றி! நன்றி! நன்றி  ஒரு போதும் செலவளிக்கவே இயலாத ஒன்று அது தரத்தரவே திரும்பி விடுவதைக் காண்கிறேன்.